தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதரை அமெரிக்க உளவுத்துறையின் (CIA) தலைவர் வில்லியம் பர்ன்ஸ் மிக இரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்த இரகசிய சந்திப்பு நடைபெற்றதாக வொஷிங்டன் போஸ்ட் மற்று அசோசியேடட் பிரஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதை அடுத்து அங்கிருந்து அமெரிக்கர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் அவசர கதியில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில் தலிபான் உயர்மட்டத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிர்வாகத்திற்கும் இடையிலான மிக உயர்மட்டச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளபோதும் மீட்பு நடவடிக்கைகளுக்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்படி ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ஆம் திகதிக்குள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் வெளியேறிவிட வேண்டும் என உடன்பாடு எட்டப்பட்டது. இதற்குப் பின்னரும் நாட்டில் தங்கியிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை முழுமையாக மீ்ட்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையிலேயே அமெரிக்க படைகள் வெளியேறுவாதற்கான மேலதிக கால அவகாசத்தை உறுதி செய்யும் வகையில் தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதரை அமெரிக்க உளவுத்துறையின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் காபூலில் மிக இரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.